Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மனைவியை கழுத்தை நெரித்து கொன்று உடல் பள்ளத்தாக்கில் வீச்சு: காதலியுடன் இன்ஜினியர் கைது

திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொன்று 50 அடி பள்ளத்தாக்கில் உடலை வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது ஈரான் நாட்டு காதலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் அருகே உள்ள காணக்காரி என்ற பகுதியை சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களுக்கு 28 வயதில் ஒரு மகளும், 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். சாப்ட்வேர் இன்ஜினியரான சாம் ஜார்ஜ் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா பட்டப்படிப்பும் படித்து வருகிறார். இந்த நிலையில் சாம் ஜார்ஜிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 15 வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சாம் ஜார்ஜிக்கு கோட்டயத்தில் 4.5 ஏக்கர் நிலமும், கோவா மற்றும் கோவளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இதனால் கணவன், மனைவிக்கிடையே சொத்து தகராறும் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகள், தாய் ஜெஸியை பலமுறை போனில் அழைத்தும் கிடைக்காததால் இதுகுறித்து கோட்டயம் குரவிலங்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். ஆனால் வீட்டில் கணவன், மனைவி இருவரும் இல்லை. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே நேற்று இடுக்கி மாவட்டம் உடும்பன்னூர் அருகே உள்ள செப்புக்குளம் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் ஜெஸியின் உடல் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இது ஒருபுறம் இருக்க சாம் ஜார்ஜ் மைசூரூவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் தான் மனைவி ஜெஸியை கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசினார் என தெரியவந்தது. அதாவது கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெஸியின் முகத்தில் சாம் ஜார்ஜ் மிளகு ஸ்ப்ரே அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த அவரை படுக்கையறைக்கு கொண்டு சென்று துண்டால் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்து கொலை செய்துள்ளார்.

இதன்பிறகு அன்று இரவு ஜெஸியின் உடலை கார் டிக்கியில் போட்டு பள்ளத்தாக்கில் வீசிவிட்டு மைசூருவுக்கு தப்பிச் சென்றார். சாம் ஜார்ஜிடன் கோட்டயம் பல்கலைக்கழகத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் தொடர்ந்து அவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.