Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உயிரைப் பணயம் வைத்து விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து வந்த ஆப்கன் சிறுவன்: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

புதுடெல்லி: காபூலில் இருந்து வந்த விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்த ஆப்கானிஸ்தான் சிறுவன், டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தை முடித்து விமானம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமான ஊழியர்கள், விமானத்திற்கு அருகில் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிவதைக் கண்டு அவனைப் பிடித்து சிஎஸ்ஐஎப் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்த சிறுவன் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும், ‘ஆர்வம் காரணமாக’ அபாயத்தை உணராமல் விமானத்தின் சக்கரத்தில் ஏறிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். அவன் சிறுவன் என்பதாலும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அன்றைய தினமே அதே விமானத்தில் அவன் மீண்டும் காபூலுக்கு திருப்பி அனுப்பப்பட்டான்.

பின்னர் அந்த விமானத்தின் சக்கரப் பெட்டியை சோதனையிட்டபோது, சிறுவனுக்கு சொந்தமானது எனக் கருதப்படும் சிறிய சிவப்பு நிற ஸ்பீக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.