சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 6ம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பலத்த தரைக்காற்று காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி கள்ளக்குறிச்சி, மாவட்டங்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்யும்.
அதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களிலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும். மத்திய கிழக்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதிகள், அதை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். இதனால், மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.