கோயில் நிதியில் கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியமா?: தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம்
சென்னை: கோயில் நிதியில் கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியம் செயல்படுவதாக பரவும் வதந்திக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் இந்து கோயில்களின் நிதியில் செயல்படுவதாகவும், இந்துக்களின் வரிப்பணம் இதற்காக செலவிடுவதாகவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு கூறியிருப்பதாவது: இது முற்றிலும் பொய்யான தகவல். இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் கோயில்களின் நிதியை வேறு துறைக்கு செலவிட முடியாது.
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வழக்கமாக உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் என்பது சிறுபான்மை நலத்துறையின் கீழ் வருவதால், அந்த துறைக்காக ஒதுக்கப்படும் நிதியின் மூலமாகவே நலவாரியம் இயங்கி வருகிறது. இதேபோல், கிராம கோயில் பூசாரி நலவாரியம், இஸ்லாமியர்களுக்கான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் போன்றவை அந்தந்த பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட வருகின்றன. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள். பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.