Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்: 16 ஆயிரம் பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: வார இறுதி நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளன. இதற்காக 16 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், வரும் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 18ம் தேதி (வெள்ளி) 355 பேருந்துகளும், 19ம் தேதி (சனி) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 18ம் தேதி 55 பேருந்துகளும், 19ம் தேதி 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 18ம் தேதி மற்றும் 19ம் தேதி 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணிக்க 6,562 பேரும், சனிக்கிழமை பயணிக்க 2,805 பேரும் மற்றும் ஞாயிறுக்கிழமை பயணிக்க 7,097 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்கிறோம். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.