வன்னியர்களுக்கான சமூக நீதியை வென்றெடுக்க விழுப்புரத்தில் படை திரள்வோம்: தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்
சென்னை: வன்னியர்களுக்கான சமூக நீதியை வென்றெடுக்க விழுப்புரத்தில் படை திரள்வோம் என்று அன்புமணி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் என்பது மிகவும் நீண்டது. 1980ம் ஆண்டில் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை நிறுவியது முதல் மிகத் தீவிரமாகத் தொடங்கிய போராட்டத்தின் மூலம் இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். ராமதாஸ் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் தான் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாமக கருதுகிறது.
அதன் தொடக்கமாகத் தான் வன்னியர் சங்கம் நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ம் நாள், இட ஒதுக்கீட்டுக்காக போராளிகள் இன்னுயிர் ஈந்த மண்ணான விழுப்புரத்தில் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நடத்த தீர்மானித்திருக்கிறோம். நாம் வென்றெடுத்த அனைத்து சமூகநீதிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பாமகவினரான உங்களின் போராட்டம் தான். அந்த வகையில் இப்போதும் நமக்கான சமூகநீதியை வென்றெடுக்கவும், அதனடிப்படையில் பிற சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தப் போராட்டம் தான் காரணமாக அமையவிருக்கிறது. இதை மனதில் கொண்டு பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பாமக தொண்டர்களும் விழுப்புரம் மண்ணில் படை திரள்வோம்.
நமக்கான சமூகநீதியை வென்றெடுப்போம் என்று உங்களை அழைக்கிறேன். வன்னிய மக்களின் சமூகநீதிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக, பாமக சொந்தங்களாகிய உங்களை எதிர்பார்த்து விழுப்புரத்தில் காத்திருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


