Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 4500 கன அடி உபரிநீர் திறப்பு

சென்னை: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 34.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த, நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 36 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. நேற்று காலை நிலவரப்படி கொள்ளளவு 3000 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை, ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 1900 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால், நீர்த்தேக்கத்தின் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரிநீரை நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் 7 மற்றும் 10 ஆகிய 2 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 700 கனஅடி நீர் திறந்து விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 1500 கனஅடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து, 9 மணியளவில் 4500 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 700 கன அடி வீதமும் நீர் அனுப்பப்பட்டு வருகிறது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக அதிகரித்து திறக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.