வாலாஜாவில் இருந்து திருவள்ளூரூக்கு அழைத்து வந்து மகனை கிணற்றில் வீசி கொன்று ஐடி ஊழியரும் குதித்து தற்கொலை: மனவளர்ச்சி பாதிக்கப்பட்டதை குணப்படுத்த முடியாததால் விரக்தி
வாலாஜா: வாலாஜாவில் மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த 6 வயது மகனை, கிணற்றில் வீசி கொன்ற ஐடி ஊழியரும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர் (32), சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர்களது மகன் யாஷோ (6). இந்த குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிறந்தது. இதற்காக தொடர் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மகன் யாஷோவை தூக்கிக்கொண்டு வெளியே சென்ற சுரேந்தர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு வாலாஜா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள வலசை வேணுகோபால்புரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வாலிபர் மற்றும் சிறுவன் சடலமாக மிதப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றினர். சடலமாக கிடந்த வாலிபரின் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை வைத்து சுரேந்தர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சுரேந்தரின் குடும்பத்துடன் சென்று, சடலமாக மீட்கப்பட்ட சுரேந்தர் மற்றும் அவரது மகன் யாஷோ என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்த மகனை குணப்படுத்த முடியாததால், கிணற்றில் வீசி கொன்று தந்தையும் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.