வாக்காளர் பட்டியலில் மோசடி விவகாரம் விசாரணை விவரங்களை தாக்கல் செய்யக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
சென்னை: வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனக் கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், வாக்காளர் பட்டியல் தரவுகளை பிடிஎப் வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.