மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செப்.30ம் தேதிக்குள் தயாராகுங்கள்: அக்டோபர்-நவம்பரில் பணிகள் தொடங்கும்
புதுடெல்லி:பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்பாக தீவிர திருத்தப் பணிகளை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் மாநில தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் தலைமை தேர்தல் ஆணையர் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் மாநாட்டில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் தீவிர திருத்த பணிகளுக்கு தயாராக இருக்குமாறு தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு ஆயத்தமாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பல மாநில தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே கடைசி தீவிர திருத்தத்திற்குப் பிறகான வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொடங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.