வாக்கு திருட்டு, எஸ்ஐஆர் மோசடியை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை அழைப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பாஜ குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பாஜ பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்திருந்தாலும் சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து இன்று திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்த இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.
சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானும், சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்க இருக்கிறார்கள்.ஒன்றிய பாஜ அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தி வருகிற வாக்குத் திருட்டையும், சிறப்பு தீவிர திருத்தம் என்ற போர்வையில் நடத்த முனைகிற வாக்காளர் மோசடி குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த இன்று நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க அழைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

