பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் ஆலந்த் தொகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஆன்லைன் மூலம் நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் அதை கண்டுபிடித்ததால் தடுத்து நிறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மேலும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வாக்குதிருட்டில் ஈடுபட்டதாக புகாரை முன்வைத்தார்.
இது தொடர்பான ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடியிடம் தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று ராகுல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடகா முழுவதும் பதிவான அனைத்து வாக்குத்திருட்டு புகார்களையும் விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து கர்நாடக அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வு துறை ஏடிஜிபி பி.கே.சிங் இந்த குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.