கொல்கத்தா: பீகாரை தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், “தேர்தல் ஆணையத்தின் செயலாளர் எஸ்.பி.ஜோஷி மற்றும் துணை செயலாளர் அபினவ் அகர்வால் ஆகியோர் மேற்குவங்கத்தின் கூச்பெஹார், அலிபுர்துவார் மற்றும் ஜல்பைகுரி ஆகிய மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்பார்வையிடுவார்கள். இந்த பயணத்தின்போது, அவர்கள் பூத் அளவிலான அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வார்கள். மேலும், அரசியல் கட்சி தலைவர்களுடனும் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
ஜோஷி தலைமையிலான இரு உறுப்பினர்களை கொண்ட குழுவினர் மூன்று மாவட்டங்களில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அனைத்து உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். மேலும், இந்த குழு இன்று காலை கூச்பெஹாருக்கு செல்வதற்கு முன், அலிபுர்துவாரில் களப்பார்வை பணியில் ஈடுபடுவர். அடுத்தநாள்(நாளை) ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங்கின் சில பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்வர்.
