Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்துள்ளனர். பட்டாசு ஆலைகள் விபத்து விவகாரத்தில், விதிமுறையை மீறியதாக 400-க்கும் மேற்பட்ட ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு ஒத்துழைப்பு தராத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளின் முக்கிய தொழிலாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. இந்தத் தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எவ்வளவு வருமானம் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்தும் இந்த தொழிலில் இருக்கிறது. இப்படி ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை வரை 7 மாதங்களாக அடுத்தடுத்து தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக ஜூன், ஜூலை இம்மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து நான்கு வெடி விபத்துகளில் 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதம் தற்போது வரை 11 வெடி விபத்துகளில் 30 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோன்ற பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறது. இத்துடன் தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள 10 குழுக்களையும் அமைத்து ஆய்வுப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனுடன் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர் மேன்கள், உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் தொழிலக பாதுகாப்புத்துறை சார்பாக பாதுகாப்பு குறித்தும் செயல்முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.