அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டானார். சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில் Ibw முறையில் அவுட்டானார். ODI-ல் முதல்முறையாக தொடர்ந்து 2 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்தது.
இதையடுத்து 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த ODI போட்டிகளில் கடந்த 17 வருடங்களாக இந்திய அணி தோல்வியையே தழுவியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வருகிற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ODI போட்டியில் வென்று, இந்த சாதனையை தக்க வைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடைசியாக 2008-ல் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விராட் கோலி அடிலெய்டு மைதானத்தில் இதுவரை 5 சதங்களுடன் 975 ரன்கள் குவித்திருப்பதால், கடந்த போட்டியில் டக் அவுட் ஆனதற்கு பதிலடியாக பெரிய அளவில் ரன்களை குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இன்றைய போட்டியிலும் விராட் கோலி 4 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் போட்டியில் டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் டக் அவுட் ஆகி இருப்பது கோலியின் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறையாகும். அடிலெய்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.