கிராம சபைகளில் குறைகள் கேட்டறியப்படும்; நம்ம ஊரு நம்ம அரசு திட்டத்தில் தீர்வு: ககன்தீப் சிங் பேடி பேட்டி
சென்னை: கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் கிராம சபை கூட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கடந்த அக்டோபர் 2ல் காந்தி ஜெயந்தி அன்று விஜயதசமி என்பதால், அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நாளை நடைபெறும். தமிழ்நாட்டில் நாளை 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
10 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் காணொலி வாயிலாக பேசுகிறார். குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். குப்பை அகற்றுதல், சாலை வசதி, பேருந்து வசதி குறித்த குறைகள் கேட்டறியப்படும். தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக நாளை கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஜாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
உடனடியாக நிறைவேற்றப்படக் கூடிய 3 தேவைகளை தேர்வு செய்து கிராம சபை தீர்மானம் பெறுதல் வேண்டும். நாளை மாலையே இணையதளத்தில் பதிவுசெய்து குறைந்த காலத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். நம்ம ஊரு நம்ம அரசு திட்டத்தின் கீழ் தீர்மானங்களுக்கு தீர்வு காணப்படும். கிராமங்களில் மிக ஏழ்மையான குடும்பங்களை கண்டறிய கிராமிய வறுமை ஒழிப்பு குழுவை கேட்டுள்ளோம். கிராமிய வறுமை ஒழிப்பு குழு மூலம் ஏழை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். 6 கிராம சபைக் கூட்டங்கள் தவிர சிறப்புக் கிராம சபைக் கூட்டங்களும் நடத்தப்படும் என்று கூறினார்.