வேலூர்: விஜய்காந்த் புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என பிரேமலதா திடீர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் அண்ணா சாலை தனியார் மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லா கட்சிகளிலும், தமது கட்சி வளர்ந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் எப்படி இருக்க போகிறது? எப்படி ஜெயிப்பது, எங்கெல்லாம் ஜெயிக்க வேண்டும் என்று ஆலோசனை செய்து வருகிறோம். அந்த வகையில் நம்பிக்கைகளை தொண்டர்களிடம் வெளிப்படுத்தி வருகிறோம். யாருடன் கூட்டணி என்பது கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். தற்போது கட்சி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
எல்லாருக்கும், அவர்கள் கட்சி ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் ஆசை. தேமுதிக ஒரு அரசியல் கட்சி. எங்கள் தலைவர் விஜயகாந்த். எனவே, எந்த ஒரு கட்சியும், அமைப்பும் விஜயகாந்த் படத்தை என்றைக்கும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணியில் வரும் கட்சி தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம். தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது. ஆணவப்படுகொலை தடுக்க சட்டம் வந்தால் தேமுதிக வரவேற்கும். தேமுதிக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்று விஜயகாந்த் தெரிவித்ததே எங்கள் வழி. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தேமுதிக பொருளாளர், மண்டல தேர்தல் பொறுப்பாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.