கோவை: கணிசமான வாக்குகளை விஜய் பெற்றாலும் திமுக கூட்டணியின் வெற்றியை அது பாதிக்காது என திருமாவளவன் கூறினார். கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (நேற்று) பிரசாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்துகள். இப்பொழுதுதான் அவரது களப்பணிகள் தீவிரமடைகிறது. விஜயின் பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும்.
ஆனால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் அது ஏற்படுத்தாது. தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக, வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை.விஜய் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது. ஆனால் அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை. பாஜ - அதிமுக பிரிந்தால் திமுக-வில் இருக்கின்ற கூட்டணி கட்சிகள் மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை.
அண்ணாமலை பாஜ கட்சிக்குள்ளேயே ஒரு அரசியல் செய்கிறார்.நயினார் நாகேந்திரன் தலைமையை ஏற்றுக் கொள்வதில் அண்ணாமலைக்கு சிக்கல் உள்ளது என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது. அண்ணாமலை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை விரும்பியதை போலவே, நயினார் நாகேந்திரனும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை நடவடிக்கைகள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடியை உருவாக்குவது போன்று தான் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.