சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: தவெக கூட்டம் நடைபெற்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கரூர் கூட்டத்தில் 500 மீட்டருக்கு முன்னாலேயே விஜய் அந்த பஸ்சில் ஒளிந்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு விட்டார். அதற்குப் பிறகு லைட்டுகளையும் அமர்த்தி விட்டார்கள்.
எந்த ஒரு தலைவராவது, தான் இருப்பதை வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமர்த்திவிட்டு, எந்த ஸ்பாட்டில் தான் பேச வேண்டுமோ, அந்த ஸ்பாட்டிற்கு வந்தவுடன் லைட்டை போட்டு போட்டு அமர்த்தினார்கள். சினிமாவில், லைட்டை அமர்த்தி, அமர்த்தி போட்டு காண்பிப்பார்களே, அதுபோல காண்பித்தார்கள். அதனால், மக்கள் கூட்டம் அவர்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் பின்னாலே இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்தார்கள்.
அந்த முன்னால் வந்ததனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அங்கே மூச்சுத்திணறி தான் பத்து, பதினைந்து பேர் இறந்து இருக்கிறார்கள். கூட்டம் நடத்துபவர்கள் தண்ணீர் தயார் செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால், வைக்கப்படவில்லை. மருத்துவமனைக்கு வந்த பிறகு கேட்டால், அங்கு தண்ணீர் இல்லை, உடனே எங்கள் மாநாட்டிற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களை எடுத்து கொடுத்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்.
இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா? இப்படி எல்லாம் கேவலமான புத்தியோடு தான் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கின்றார். இதை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறார். எத்தனை கூட்டணிகள் சேர்ந்து வந்தாலும், இன்றைக்கு நாங்கள் ஐந்தாண்டு காலத்திலே எங்களுடைய முதல்வர் செய்திருக்கக்கூடிய சாதனைகள், திராவிட மாடல் ஆட்சியின் 2வது பாகத்தை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.