Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை: ஆம்புலன்ஸ்களை புக் செய்தது யார்? டிரைவர்களிடம் கிடுக்கிப்பிடி

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் பொதுமக்கள் 28 பேர், பிரசாரத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்த 22 போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் 25 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி தனித்தனியாக விளக்கம் அளித்தனர். இந்தநிலையில் விஜய் பிரசார பஸ்சில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் நாமக்கலை சேர்ந்த 2 ஆம்புலன்ஸ் டிரைவர், உரிமையாளர் என 3 பேர் நேற்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்களிடம், ஆம்புலன்ஸ் முன்பதிவு செய்தது தவெக கரூர் நிர்வாகிகளா? நாமக்கல் நிர்வாகிகளா?, நீங்கள் விஜய் பிரசார வாகனத்திற்கு பின்னால் வந்தீர்களா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். இதில் அவர்கள் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நெரிசலில் சிக்கி காயமடைந்த கரூர் ஆண்டான் பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணா, வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த முகமது நபி, வெள்ளியணையை சேர்ந்த மகாலிங்கம் ஆகிய 3 பேர் காலை 11 மணியளவில் தனித்தனியாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பின்னர் மதியம் 3 மணியளவில் ஆஜரான கரூரை சேர்ந்த செந்தில்ராஜ், வடக்கு பாளையத்தை சேர்ந்த ரபின் ஆகியோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது சிபிஐ அதிகாரிகள், கூட்டம் நடைபெற்ற இடத்தில் எந்தபகுதியில் நீங்கள் நின்றீர்கள், விஜய் பிரசார வாகனம் அருகில் நின்றீர்களா? நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்கள் மீது சிலர் ஏறி தப்பித்தனரா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதில் அவர்கள் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நேற்று விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.