Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய் கூட்ட நெரிசல் 41 பேர் பலி ஒன்றிய அரசு அதிகாரிகள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக நேற்று ஒன்றிய அரசு அதிகாரிகள் 2 பேரிடம் 2மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பொதுமக்கள் 28 பேர், பாதுகாப்பு பணியில் 22 போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் 25 பேர் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் விஜய் பிரசார பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை, பனையூர் தவெக கட்சி அலுவலக உதவியாளர் குரு, தவெக வழக்கறிஞர் அணி திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் அரசு மற்றும் கட்சி நிர்வாகி குருசரண் ஆகியோர் கடந்த 8ம்தேதி ஒப்படைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் சென்னை பதிவு எண் கொண்ட காரில் இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒன்றிய பொதுத்துறை நிறுவன அதிகாரிகள் (பவர்கிரிட்) 2 பேர் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகம் வந்தனர். அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான 2 பேர், மின் விநியோகம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர். 2 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் 11.30 மணியளவில் வெளியே வந்த 2 அதிகாரிகளும் காரில் ஏறி சென்றனர். இதனிடையே நேற்று காலை முதல் மதியம் வரை ஒருவர் பின் ஒருவராக வந்த 2ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், 4ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.