சென்னை: கரூரில் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்த விவகாரத்தை தொடர்ந்து, அவரது சென்னை பனையூரில் உள்ள வீட்டிற்கு சென்னை போலீசார் மற்றும் 12 சிஆர்பிஎப் வீரர்களுடன் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இந்த துயர சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக திருச்சி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவோடு இரவாக சென்னைக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அடையார் துணை கமிஷனர் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டிற்கு செல்லும் சாலையின் இடையே இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நடிகர் விஜய் வீட்டின் அருகே தவெக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் கூடுதலாக 12 சிஆர்பிஎப் வீரர்கள் அவரது வீட்டின் முன்பு பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். நடிகர் விஜய் வீட்டின் அருகே போலீசார் யாரையும் விடவில்லை.
வீடு முற்றுகை: விஜய்யை கைது செய்ய கோரி நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிறிது தொலைவில் தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்தவர்கள், நடிகர் விஜய்க்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார்அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
வெடிகுண்டு மிரட்டல்: இந்நிலையில் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று இரவு சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் இறுதியில் வந்த தகவல் புரளி என தெரிய வந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.