Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலிக்க ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை

சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்.

கடந்த 13ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் செப்டம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை ஒவ்வோரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, அனுமதி வழங்க மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கக்கோரி த.வெ.க. சார்பில் கடந்த 9 மற்றும் 15ம் தேதிகளில் டிஜிபியிடம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து, உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.