Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

41 விஜய் பிரசாரத்தில் பேர் பலி; கண்ணா மூச்சு விளையாடும் ‘புஸ்ஸி’: இட்டுனு வந்து இட்டுனு போனவரு கடலுக்குள்  பதுங்கி இருக்காராம்...

* கைதுக்கு பயந்து ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு போறாரு...

திருச்சி: கரூர் சம்பவம் தொடர்பாக ஜாமீன் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடுக்கடலில் படகில் பதுங்கி இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். 108 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், எஞ்சியிருந்த 2 பேரும் நேற்று வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக கரூர் மாநகர மாவட்ட பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் நீதிபதி எம்.ஜோதிராமன் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த தீர்ப்பளித்த நீதிபதி, ‘‘மனுதாரர்கள் இருவரும் வழக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளியான மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்க முடியாது’’ எனக் கூறி தள்ளுபடி செய்தார். முன்ஜாமீன் கேட்டு புஸ்ஸி ஆனந்த் சார்பில் அவரது வக்கீல்கள் வாதிடும் போது, ‘கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது’ என்று கூறினார். ஆனால், விஜய் செல்லும் அனைத்து கூட்டத்துக்கும் இவர்தான் ஏற்பாடுகள் செய்கிறார்.

கரூர் மற்றும் நாமக்கலில் விஜய் பிரசாரம் செய்யும் முன் இடத்தை தேர்வு செய்து ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தது புஸ்ஸி ஆனந்த். பொதுவாகவே, விஜய்யை இட்டுனு வந்து இட்டுனு போறதுதான் கஷ்டம் என்று வசனம் பேசுவார். ஆனால், 41 பேர் பலியானதும் எனக்கும் கூட்டத்துக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் பேசி வருகிறார். ஐகோர்ட் கிளையில் இருவரின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடியான நிலையில், தனிப்படை போலீசார் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும், புஸ்ஸி ஆனந்த் ராமேஸ்வரம் பகுதிக்கு சென்றுள்ளதாகவும், அங்கிருந்து படகு மூலம் செல்போன் சிக்னல் கிடைக்காத பகுதிக்கு அவரை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் கடலில் படகில் பதுங்கியுள்ள தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் ரோந்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாளை (திங்கட் கிழமை) முன்ஜாமீன் கோரி இருவரும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். அதுவரை போலீசின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக கடலில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.