Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஜய் தலைமையை ஏற்க பாஜவை கழற்றிவிடவும் தயங்க மாட்டார்; அதிமுக தொண்டர்களை வைத்தே தவெக கொடியை பிடித்த எடப்பாடி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: அதிமுக தொண்டர்களை வைத்தே தவெக கொடியை பிடித்த எடப்பாடி, விஜய் தலைமையை ஏற்க பாஜவை கழற்றிவிடவும் தயங்க மாட்டார் என்று டிடிவி தினகரன் பேட்டி திருவண்ணாமலையில் நேற்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: கரூரில் கொடுமையான துயர சம்பவம் நடந்துள்ளது. வீடு பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்பு கேட்டதுபோல, இந்த நேரத்தில் அரசியல் ஆதாயம் தேட எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

அரசியலில் அவர் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார். தவெக கட்சி கொடியை அதிமுக தொண்டரிடம் கொடுத்து தூக்கிப்பிடிக்க வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. எங்கள் தலைமையை ஏற்பவர்களுடன்தான் தவெக கூட்டணி அமைக்கும் என ஏற்கனேவே விஜய் பேசியிருக்கிறார். எனவே, விஜய் தலைமை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயராகிவிட்டது தெரிகிறது. அந்த அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது. அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால், பாஜவை கழற்றிவிட எடப்பாடி பழனிசாமி தயங்கமாட்டார். ஆனால், விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்று தெரியாது.

எடப்பாடி பழனிசாமி எந்த துரோகத்துக்கும் தயங்காதவர். வரும் தேர்தலில் 15 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைத்தான் பெறும். அதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 2024 தேர்தலில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜவுக்கு எதிராக பேசியவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது பாஜவின் நம்பிக்கைக்குரியவர் போல நாடகமாடுகிறார். அதிமுக ஆட்சியை காப்பாற்றியதால் பாஜகவுக்கு நன்றியோடு இருப்பேன் என்கிற எடப்பாடி பழனிசாமி, 2024ல் எதற்காக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார். எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர். துரோகத்தை தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி இன்னும் பலவீனமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுக்கு ஆதரவு; ‘கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்திருப்பது மாநில அரசின் உரிமை. எந்த மாநில அரசாக இருந்தாலும் இப்படித்தான் ெசய்யும். தமிழ்நாட்டின் உரிமையை விட்டுவிட கூடாது என்பதற்காக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார்.