விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி புஸ்ஸி ஆனந்த், ஆதவ்அர்ஜூனாவிடம் 10 மணிநேரம் துருவிதுருவி விசாரணை: கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறடித்த சிபிஐ அதிகாரிகள்
கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, பொருளாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்படி கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு நேற்று காலை 10மணியளவில் 5 பேரும் தனித்தனியாக காரில் வந்தனர். 5 பேரிடமும் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தவெக பிரசார கூட்ட ஏற்பாட்டு பணிகளை யார் செய்தது, கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தார்கள், எத்தனை மணியில் இருந்து கூட்டம் கூடியது, கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக என்னென்ன அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன, விஜய் எத்தனை மணிக்கு வந்தார்,
கூட்டத்தில் என்ன நடந்தது, எப்படி நெரிசல் ஏற்பட்டது, ஆம்புலன்ஸ் எப்படி வந்தது, அதற்கு ஏற்பாடு செய்தது யார்?., கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, இரவு 7 மணிக்கு விஜய் வருவது தெரிந்தும் ஏன் 12மணிக்கே விஜய் வருகிறார் என்று தகவல் வெளியிட்டீர்கள் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை துருவி, துருவி கேட்டனர். அவர்களது வாக்கமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 8 மணி வரை நடந்தது. இன்றும் (24ம்தேதி) தொடரும் என கூறப்படுகிறது. விசாரணை அலுவலகம் முன்பு நேற்று காலை முதலே தவெகவினர் குவியத் தொடங்கினர். அவர்களை கரூர் டவுன் போலீசார் அப்புறப்படுத்தினர்.
விஜய்க்கும் சம்மன்: விஜய்க்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



