விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் கரூரில் விசாரணையை தொடங்காத சிபிஐ : தீபாவளிக்கு சென்ற அதிகாரிகள் இன்னும் திரும்பாதது ஏன்? பரபரப்பு தகவல்கள்
கரூர்: தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்ற அதிகாரிகள் 11 நாளாகியும் கரூர் திரும்பாததால் சிபிஐ விசாரணை மந்தமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க குஜராத் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஸ்குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 17ம்தேதி அதிகாலை கரூர் வந்தனர்.
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் தங்கியிருந்த சிபிஐ குழுவினர், ஒரே ஒரு முறை மட்டும் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தை காரில் இருந்தபடியே பார்வையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணைக்காக எங்கும் அவர்கள் செல்லவில்லை. மறுநாள் 18ம்தேதி வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளை மட்டும் பயணியர் விடுதிக்கு நேரில் வரவழைத்து விசாரித்த சிபிஐ குழுவினர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கூட நேரில் சந்தித்து விசாரிக்கவில்லை.
இந்நிலையில், தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு கடந்த 19ம்தேதி புறப்பட்டு சென்ற சிபிஐ அதிகாரிகள், 11 நாட்களாகியும் நேற்று வரை கரூர் திரும்பவில்லை. பயணியர் விடுதியில் சிபிஐ குழுவில் உள்ள இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் தலைமை காவலர் மட்டுமே தங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களும் இதுவரையிலும் எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘‘41 பேர் உயிரிழந்துள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. ஆனால் சிபிஐ அதிகாரிகளின் செயல்பாடு மந்தமாகவே உள்ளது. ஏதோ அரசியல் உள்நோக்கத்துக்காக சிபிஐ செயல்படுவது போல் தெரிகிறது. சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும்,’’என்றனர். இதுதொடர்பாக சிபிஐ வட்டாரத்தில் விசாரித்தபோது,‘‘தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற அதிகாரிகள் விரைவில் கரூர் வந்து விசாரணையை தொடர்வார்கள். மாதந்தோறும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் விசாரணை முறைப்படி நடைபெறும். இதில் எந்தவித தொய்வும் ஏற்பட வாய்ப்பு இல்லை. சிறப்பு புலனாய்வு குழு அளித்த 1,316 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை முழுவதும் சரிபார்ப்பு மற்றும் மொழி பெயர்ப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. அதன் பின்னர் இந்த விசாரணை அறிக்கையை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் அதிகாரிகள், சம்பவம் நடந்த துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் இறந்தவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் தீவிர விசாரணையை துவங்குவார்கள்’’ என்றனர்.
