வேலூர்: வேலூர் கஸ்பா பயர் லைன் அம்பேத்கர் நகரை சேர்ந்த என்.சீனிவாசன்(50) என்பவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாட்டுக்காக, வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடில் உள்ள ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருபவரின் கட்டாயத்தின் பேரில், என் தம்பி மதனை அவரது சுயலாபத்துக்காக, தவெக மதுரை மாநாட்டுக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 27ம் தேதி அன்று உடல் சிதைந்த நிலையில் சடலமாக எடுத்து வந்து ஒப்படைத்தனர். என் தம்பி மர்ம மரணத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. ஆகவே என் தம்பியை கட்டாயப்படுத்தி வேனில் அழைத்து சென்று பிணமாக கொண்டு வந்தது சம்பந்தமாக, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி மயில்வாகனன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க தெற்கு காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.