Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மயக்க ஊசி செலுத்த முயன்றபோது ‘ரோலக்ஸ்’ யானை தாக்கி கால்நடை டாக்டர் படுகாயம்

கோவை: கோவை மாவட்டம் நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘ரோலக்ஸ்’ என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் நுழைந்து, பயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ‘ரோலக்ஸ்’ யானையை கெம்பனூர் பகுதியில் பிடிக்க வனத்துறையினர் முயற்சி நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் ஓய்வுபெற்ற வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றனர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் யானை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. யானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தால் மயக்க ஊசி செலுத்த இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் ‘ரோலக்ஸ்’ யானை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனக் கால்நடை டாக்டர்கள் விஜயராகவன், வெண்ணிலா மற்றும் மனோகரன் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து யானையை கண்காணித்தனர். அப்போது வாழை தோட்டத்தில் இருந்து வெளிவந்த யானைக்கு டாக்டர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார். அப்போது திடீரென அந்த யானை டாக்டர் விஜயராகவனை நோக்கி வந்து அவரை தும்பிக்கையால் கீழே தள்ளி தாக்க முயன்றது.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த வனப்பணியாளர்கள் சத்தம் எழுப்பி யானையை விரட்டி டாக்டரை மீட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை வாகனம் மூலம் டாக்டரை அழைத்து சென்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் விஜயராகவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற டாக்டரை யானை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.