வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு போதைப் பொருள் கடத்தி வந்த வெனிசுலா கப்பல் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப் பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மதுரோவை கைது செய்தால் வழங்கப்படும் பரிசுத் தொகையை, 415 கோடி ரூபாயாக இரண்டு மடங்காக உயர்த்தி, அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தியதில், 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் 28 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சியை டிரம்ப் வெளியிட்டு உள்ளார். இந்த தாக்குதல் சர்வதேச கடற்பரப்பில் நடந்துள்ளது என்றும், இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த கப்பலில் போதைப் பொருள் இருந்ததற்கான ஆதாரம் எதையும் டிரம்ப் வெளியிடவில்லை. ஏற்கனவே கடந்த 3ம் தேதி ஒரு வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இது இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.