வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு அதிக விலை கிடைப்பதால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் குவிந்தது
வேலூர்: வேலூர் டோல்கேட் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் இன்று ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது. வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்குட்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில் நேற்று விற்பனை கூடத்திற்கு வந்த 75 கிலோ ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்சமாக ரூ.2,030க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஏடிடி-37 ரூ.1,277க்கும், கோ55-ரூ.1,300க்கும், மகேந்திரா 606 ரூ.1,277-2010க்கும், நர்மதா ரூ.1,639-1,880க்கும், அமோகா ரூ.1,469க்கும், சுமங்கலி-ரூ.1,809க்கும், சுவேதா-ரூ.1.850க்கும் விற்பனையானது.
அதேபோல் நிலக்கடலை 80 கிலோ மூட்டை ரூ.8,001க்கும், தேங்காய் (கொப்பரை) கிலோ ரூ.201 முதல் ரூ.223க்கும், கேழ்வரகு 100 கிலோ ரூ.4,230க்கும், கம்பு ரூ.2,569-3,029 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வேலூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மேலும், ஆர்என்ஆர், மகேந்திரா 606 ரக நெல் அதிகபட்சமாக விலை கிடைப்பதால், விவசாயிகள் இன்று ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு வந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இடம் இல்லாததால் தொரப்பாடி சாலை ஓரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏறப்பட்டது. ஒரே நேரத்தில் விவசாயிகள் நெல்மூட்டைகளை அதிகளவு கொண்டு வந்ததால் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வாகனமாக விற்பனை கூடத்திற்கு சென்று நெல் மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.