*மாடுகள் வரத்து அதிகரிப்பு
வேலூர் : வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளதால் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைகளில் வட மாவட்டங்களில் பெயர்பெற்றது.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இச்சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக இங்கு ஒரு நல்ல கறவை மாடு என்பது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்துக்கு மேல் வரை அதன் தரத்துக்கும், கறவை திறனுக்கும் ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1.30 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும். இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் 1,500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் கூறியதாவது:
கோடைக்கு பிறகு பெய்த மழையால் தீவன தட்டுப்பாடு இல்லை. இதனால் விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்ய தயங்கினார்கள். இதனால் மாடுகள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. தற்போது மாடுகள் விற்பனை செய்தால் அதிக விலைக்கு விற்க முடியும் என்பதால் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் ஆடி மாதம் எப்போதும் வியாபாரம் நன்றாக இருக்கும். இவைகளில் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் விற்பனையும் ரூ.1 கோடி வரை நடந்தது. அதோடு கால்நடைகளுடன் கோழிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு, கழுத்துப்பட்டி உட்பட பொருட்கள் அனைத்தும் சேர்ந்து ரூ.5 லட்சம் வரையும் என மொத்தம் பொய்கை கால்நடை சந்தையில் ரூ.1 கோடி வரை விற்பனை நடந்ததாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.