திருப்புவனம்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (28). இவர் கடந்த 12ம் தேதி தனது மனைவி சத்யா (24), மகன் அஷ்வின் (4) ஆகியோருடன் பைக்கில் சென்றபோது எதிர்பாராமல் போலீஸ் வாகனம் மோதியது. இதில் மூவரும் உயிரிழந்தனர். போலீஸ் வாகன ஓட்டுநர் பாலமுருகன் மீது பூவந்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த மூவரின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் வாகனத்தில் வந்த பெண் இன்ஸ்பெக்டர், ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி உறவினர்கள் உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்று உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸ் வாகன ஓட்டுநர் பாலமுருகனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
