Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழையினால் வரத்து குறைந்தது கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை தொடர்ந்து உயர்வு: பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கு எகிறியது

சென்னை: மழை விட்டுவிட்டு பெய்து வருவதாலும், காய்கறிகளின் வரத்துக் குறைந்ததாலும், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய முன்தினம் காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 540 வாகனங்களில் இருந்து 5,000 டன்னுக்கு குறைவான காய்கறிகளே வந்தன. இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன.

ஒரு கிலோ வெங்காயம் ரூ.30ல் இருந்து ரூ.35க்கும், சின்ன வெங்காயம் ரூ.60ல் இருந்து ரூ.70க்கும், தக்காளி ரூ.30ல் இருந்து ரூ.40க்கும், பீட்ரூட் சவ்சவ் கேரட் ரூ.50ல் இருந்து 60க்கும், உருளைக்கிழங்கு, நூக்கல் ரூ.35ல் இருந்து ரூ.45க்கும், முள்ளங்கி கோவைக்காய் கொத்தவரங்காய் ரூ.30ல் இருந்து ரூ.40க்கும், வெண்டைக்காய் பாவக்காய் சேமக்கிழங்கு வெள்ளரிக்காய் ரூ.40ல் இருந்து ரூ.50க்கும்,

முட்டைகோஸ் காளிபிளவர் ரூ.25ல் இருந்து ரூ.35க்கும், காராமணி ரூ.60ல் இருந்து ரூ.70க்கும், புடலங்காய் ரூ.45ல் இருந்து ரூ.55க்கும், சேனைக்கிழங்கு ரூ.75ல் இருந்து ரூ.85க்கும், முருங்கைக்காய் ரூ.60ல் இருந்து ரூ.80க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும், பூண்டு ரூ.150ல் இருந்து ரூ.380க்கும், அவரைக்காய் ரூ.80ல் இருந்து ரூ.90க்கும், பீர்க்கங்காய் ரூ.70ல் இருந்து ரூ.80க்கும், வண்ண குடைமிளகாய் ரூ.180ல் இருந்து ரூ.190க்கும விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த மற்றும் சிறு வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தோட்டத்தில் இறங்கி காய்கறிகளை விவசாயிகள் பறிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது என்றார்.