சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் தலைவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது புகழை போற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, உருவப்படத்துக்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்;
அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சாநெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது நினைவு நாள்!
சிப்பாய்ப் புரட்சிக்குப் பல ஆண்டுகள் முன்னரே விடுதலைப் போராட்ட உணர்வைப் பரவச் செய்து, உறுதி குலையாமல் போராடி உயிர் துறந்த பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரராம் கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும்!. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.