வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்
கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து கடந்த 10ம்தேதி 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் 3 பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் மறுநாள் 11ம்தேதி இரவு 10.30 மணி அளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைபர் ஸ்பீடு படகில் வந்த தமிழ் பேசக்கூடிய 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் முருகையன், வெண்ணிலா, தேவி ஆகியோருக்கு சொந்தமான 3 பைபர் படகுகளை சுற்றிவளைத்து ஏறியதோடு, மீனவர்கள் மீது இரும்பு பைப், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களிடமிருந்து மொபைல் போன்கள், ஜி.பி.எஸ் கருவிகள், இஞ்சின், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட ரூ.9லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர்.
இந்த தாக்குதலில் 3 படகில் இருந்த 12 மீனவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் காரங்காட்டை சேர்ந்த அந்தோணி பிச்சை (39), செருதூர் தமிழழகன் (26), வீரமணி (54), ராஜவேல் (23), பாலகிருஷ்ணன் (49), இடும்பன் (47), கணேசன் (55) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். நேற்று காலை 8 மணி அளவில் மீனவர்கள் கரை திரும்பினர்.
காயம் அடைந்த 7 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மீனவ பஞ்சாயத்தார் மற்றும் கடலோர காவல் படையினரிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.