வடபழனி முருகன் கோயில் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம், குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து வழக்கு: அறநிலையத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: வடபழனி முருகன் கோயிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம், பணியாளர் குடியிருப்பு கட்டுவதை எதிர்த்து மனு மீது இந்து சமய அறநிலையத்துறை விசாரணை செய்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.பாண்டியராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,‘வடபழனி முருகன் கோயிலில், வள்ளி திருமண மண்டபம் அருகே புதிதாக திருமண மண்டபம் கட்டுவதற்கும், தெய்வானை திருமண மண்டபம் அருகே பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கும் இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது.
கோயிலில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடத்தப்பட்டதால், அப்பகுதி மிகவும் நெரிசலாகி, பக்தர்கள், பொதுமக்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் என அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, வாகன நிறுத்துமிடங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரு மண்டப வளாகங்களில் 300 நான்கு சக்கர வாகனங்களையும், 500 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்துக்கூடிய சூழல் உள்ளபோது, புதிதாக திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டப்பட்டால் மீண்டும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
பக்தர்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப்படும் நிதி தேவையற்ற நோக்கங்களுக்காக வீணடிக்கப்படுகிறது. புதிய கட்டுமானங்களுக்கான முடிவுகளை கைவிடக் கோரி கடந்த மார்ச் மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர்,‘மனுதாரரின் புகார் மீது கடந்த மே மாதம் விசாரணை தொடங்கப்பட்டு அதற்கு மனுதாரரையும் அழைத்துள்ள நிலையில், கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறமுடியாது.
மேற்கொண்டு இந்த வழக்கை நிலுவையில் வைத்திருக்க அவசியம் இல்லை. வழக்கை முடித்து வைக்கிறோம். மனுதாரரின் புகாரை வடபழனி முருகன் கோயில் செயல் அலுவலர் முறையாக விசாரித்து, 3 வாரங்களுக்குள் அறநிலையத் துறை ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பொறுத்து, தேவைப்பட்டால் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறி உத்தரவிட்டனர்.