Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போக்குவரத்து துறையில் 3,000 காலியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 4 இடங்களில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கும் விழா இன்று நடைபெற்றது. நவல்பட்டு அண்ணா நகரில் நடந்த விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகித்தார். இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்தை இயக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருவெறும்பூர், பாப்பாக்குறிச்சி மற்றும் தஞ்சை பைபாஸ் சாலை பால்பண்ணையில் இருந்து 3 பேருந்துகளை அமைச்சர் இயக்கி வைத்தார். இதன்பின்னர் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன்கருதி அவரவர் தேவைக்கேற்ப பேருந்து இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தனியாக சிறப்பு பேருந்து இயக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை விடுத்தார் அதன்படி சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி சென்னையில் உள்ள 85 பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் எங்கெங்கு பேருந்துகள் கூடுதலாக தேவை என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இயக்கப்படும். மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை செயல்படுத்துவதற்கு தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி நிறைவடைந்த பிறகு மின் கணக்கீட்டு முறை நடைமுறைக்கு வரும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 3,000 பேர் நிரப்பப்படவுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.