மாஸ்கோ: அமெரிக்காவுக்கு பதிலடியாக ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்தார். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய அந்த ஏவுகணை, எத்தனை ஆயிரம் கி.மீ. வரையும் சென்று இலக்குகளைத் தாக்கும் வரம்பற்ற திறனைக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, வரம்பற்ற தொலைவுக்குப் பயணிக்கும், அணுசக்தியில் இயங்கக்கூடிய பொசைடன் நீர்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததாக புதின் அக். 29-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த சோதனைகள் மூலம் அணுஆயுதப் போட்டியில் அமெரிக்காவை ரஷ்யா வெகுவாக முந்திவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ரஷ்ய, அமெரிக்க சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கும் திட்டத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, தாங்களும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு புதின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய புதின்; நிறுத்திவைக்கப்பட்ட அணு ஆயுத சோதனைகளை மறுபடியும் நடத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், அமெரிக்கா அத்தகைய சோதனையில் ஈடுபட்டால் ரஷ்யாவும் அந்த நடவடிக்கையில் இறங்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அண்மைக்கால உத்தரவையடுத்து, அந்த நாடு மீண்டும் அணு ஆயுத வெடிப்பு சோதனைகளை நடத்தவிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துவதற்கு ஆயத்தமாகும் வகையில் அதற்கான செயல்திட்டங்களை உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.
