வாஷிங்டன் : ரஷ்யாவின் தாக்குதல் அச்சம் காரணமாக உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. கீவ் நகரில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஏடிஏசிஎம்என் என்னும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவின் உள் பகுதிகளில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோபிடன் அண்மையில் அனுமதி வழங்கினார். இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் ப்ரையன்ஸ் பகுதியில் உள்ள ராணுவ நிலைகள் மீது உக்ரைன் நேற்று தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கைகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் நேற்று ஒப்புதல் அளித்தார். ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அளிக்கும் நாடுகள், ரஷ்யாவிற்கு எதிராக போரில் ஈடுபடுவதாகவே கருதப்படும் என்றும் உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அதிபர் புதின் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகர் மீது ரஷ்ய தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.


