Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 26ல் தொடங்கி வைக்கிறார்; சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்இந்த திட்டத்தை சென்னையில் வரும் 26ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த புதிய திட்டத்தால் 3.05 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்றது. இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் 25.8.2023 அன்று கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று காமராஜரின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசும், தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று கடந்த மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் வரும் 26ம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக 3.05 லட்சம் மாணவ, மாணவிகள் தினசரி பயன்பெறுவர். இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

மேலும் 3.05 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்

* கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி முதல்வரின் காலை உணவுத் திட்டம் துவங்கப்பட்டது.

* இதன் மூலம் 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றனர்.

* தற்போது நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

* 2,430 பள்ளிகளில் உள்ள 3.05 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவர்.