கொலோன் பல்கலை.யின் தமிழ்த்துறை வழங்கிய ஓலைச்சுவடிகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் ஒப்படைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் பாலகிருஷ்ணன், இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரத்திற்கும் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 1ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உடனடியாக கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஜூலை 7ம் தேதி உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.