சென்னை: ஏஐ சார்ந்த 5 இலவச படிப்புகளை ஒன்றிய அரசு தனது ஸ்வயம் தளத்தில் வழங்கியுள்ளது. நம்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக ஸ்வயம், திக்ஷா, என்பிடெல் உட்பட பல்வேறு டிஜிட்டல் தளங்கள் வழியாக இணையவழி படிப்புகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் இலவசமாக வழங்கி வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிகஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த இலவச படிப்புகளை ஒன்றிய அரசு தனது ஸ்வயம் தளத்தில் வழங்கியுள்ளது. இவற்றை படிக்க மாணவர்கள் https://swayam-plus.swayam2.ac.in./ என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
அதில் பைத்தான் மூலம் செயற்கை நுண்ணறிவு /இயந்திரக் கற்றல்(AI/ML Using Python), ஏஐ மூலம் கிரிக்கெட் பகுப்பாய்வு, இயற்பியல் ஏஐ, வேதியியல் ஏஐ, கணக்கியல் ஏஐ ஆகிய 5 படிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ மூலம் கிரிக்கெட் பகுப்பாய்வு படிப்பானது சென்னை ஐஐடி பேராசிரியர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.