Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி போலி சிபிஐ ஆபீசர் கைது: விமானத்தில் வந்து டெல்லிக்கு தூக்கி சென்ற அதிகாரிகள்

கோவை: ஒன்றிய அரசு வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சித்திரவேல்(32). இவர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய அரசில் வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார்.

மேலும் ஆன்லைனில் மோசடியும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதனடிப்படையில் சிபிஐ அதிகரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சித்திரவேல், கோவை ரேஸ்கோர்சில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது செல்போன் லொக்கேஷனை வைத்து இருப்பிடத்தை கண்டறிந்து 5க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் கோவை வந்தனர்.

ரேஸ்கோர்சில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சித்திரவேலை கைது செய்தனர். வீட்டில் சோதனையிட்டபோது ஏராளமான போலி சிபிஐ அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கோவையில் தனி இடத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவியுடன் சித்திரவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

தொடர்ந்து, நேற்று அவரை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி அழைத்து செல்ல சிபிஐ அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சிவக்குமார் டெல்லி அழைத்து செல்ல அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து சித்திரவேலை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர். அங்கு கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளார். அதன்பிறகு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.