Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி : இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக இருக்கும் பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று செப்.30 வரை பருத்திக்கு வரி விலக்கு அளித்திருந்த ஒன்றிய அரசு, அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததால், உத்தரவை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்தது.

பருத்தி இறக்குமதிக்கு, வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஜவுளித் தொழிலுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி விதிப்பால் இந்திய ஜவுளித் துறை எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 25% வரியை ஆகஸ்ட் 1, 2025 முதல் அறிவித்து, பின்னர் அதனை 50% ஆக உயர்த்தியதால், தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியான 52.1 பில்லியன் டாலர்களில் 31% அமெரிக்காவிற்கு சென்றவை, இதில் ஜவுளி ஏற்றுமதி 28% பங்களித்துள்ளது. இந்த வரி உயர்வு, தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் 30 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படுத்தலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் எச்சரித்திருந்தார்.

இந்தச் சூழலில், பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை செப்டம்பர் 30, 2025 வரை தற்காலிகமாக நீக்குவது, இந்திய ஜவுளித் துறையின் உற்பத்தி செலவைக் குறைத்து, அமெரிக்காவின் வரி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு தணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலக்கு, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பருத்தி இறக்குமதிகளுக்கும் பொருந்தும், இதனால் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம் என்று இந்திய துறைமுகங்களுக்கு வரும் சரக்குகளுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இந்த நடவடிக்கை, ஜவுளித் துறையில் உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்துவதற்கும், ஏற்றுமதி போட்டித்தன்மையை பராமரிக்கவும் உதவும்.

உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியில் போட்டித் தன்மையுடன் செயல்பட இந்த அறிவிப்பு உதவும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.