2 மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வசூலிக்க வேண்டும் : வீட்டு உரிமையாளர்களுக்கு செக் வைத்த ஒன்றிய அரசு!!
டெல்லி : வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், புதிய விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு..
*இனிமேல் வெறும் கையெழுத்து அல்லது ஸ்டாம்ப் பேப்பரில் ஒப்பந்தம் போட்டால் மட்டும் போதாது. கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை மாநில அரசின் இணையதளத்தில் டிஜிட்டல் முத்திரையிட்டு (Digital Stamping) ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.
*ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தவறினால், மாநிலங்களைப் பொறுத்து, வீட்டு உரிமையாளருக்கு ரூ.5,000 முதல் அபராதம் விதிக்கப்படும்.
*வீட்டு உரிமையாளர் நினைத்தபோதெல்லாம், நோட்டீஸ் கொடுக்காமல் வாடகையை ஏற்ற முடியாது.வாடகை ஒப்பந்தம் செயல்படத் தொடங்கிய 12 மாதங்களுக்குப் பிறகு மட்டுமே வாடகை உயர்த்தப்பட முடியும்.
*வாடகை உயர்வை அமல்படுத்துவதற்கு குறைந்தது 90 நாட்களுக்கு முன்னதாகவே வீட்டு உரிமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்
*குடியிருப்பு வீடுகளுக்கு, வீட்டு உரிமையாளர்கள் இரண்டு மாத வாடகைக்கு மேல் வைப்புத் தொகையாகப் பெற முடியாது.
*வாடகைத் தீர்ப்பாயத்தின் (Rent Tribunal) அதிகாரப்பூர்வ வெளியேற்ற உத்தரவு இல்லாமல் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்ற முடியாது.
*வீட்டு உரிமையாளர் வீட்டைப் பார்வையிட அல்லது சோதனையிட விரும்பினால், உரிமையாளர் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இது வாடகைதாரரின் தனியுரிமையைப் பாதுகாக்கிறது.
*வாடகைதாரர்கள் கட்டாயம் போலீஸ் சரிபார்ப்புக்கு (Police verification) உட்படுத்தப்பட வேண்டும். இது முறையான பதிவுகளை உருவாக்கவும், வாடகைக்கு விடப்பட்ட சொத்து தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது.
*வாடகைதாரரை மிரட்டுவதற்காக மின்சாரம் அல்லது தண்ணீரைத் துண்டிப்பது (Lockouts or cutting off basic services) போன்ற அச்சுறுத்தும் செயல்கள் இனி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
*அத்தியாவசியப் பழுதுகளை (Essential Repair) உரிமையாளரிடம் தெரிவித்தும் அவர் 30 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால், குடியிருப்போர் தாங்களே சரிசெய்து, அதற்கான செலவை வாடகைத் தொகையில் கழித்துக் கொள்ளலாம் (செலவுக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்).
*வாடகை தொடர்பான சச்சரவுகளைத் தீர்க்கச் சிறப்பு வாடகைத் தீர்ப்பாயங்கள் (Rent Tribunal) அமைக்கப்படும். இவை பிரச்சனைகளுக்கு விரைந்து (60 நாட்களுக்குள்) முடிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

