சென்னை: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விவரங்களை சரியாக பதிவு செய்யுமாறு தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தியுள்ளது. நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான ஒன்றிய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். தேசிய தேர்வுகள் முகமையால் (என்டிஏ) இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை கணினி வழியில் நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான 2ம் கட்ட நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது நடந்து வருகிறது. பட்டதாரிகள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க நவம்பர் 7ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. இதற்கிடையே நெட் தேர்வெழுத விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் தங்கள் ஆதார் விவரங்களை சரியாக பதிவுசெய்ய வேண்டும். அவை 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விவரங்களுடன் பொருந்திருக்க வேண்டும். சமீபத்திய புகைப்படம் இடம்பெறுவதுடன், சமர்ப்பிக்கப்படும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் செல்லத்தக்க ஒன்றாக இருப்பதும் அவசியமாகும். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை /ugcnet.nta.nic.in// www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-69227700/40759000 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.