வரும் டிசம்பர் 12ம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் :துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சிவகாசி : சிவகாசியில் இன்று நடைபெற்ற மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வரும் டிசம்பர் 12ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தடைகளையும் தாண்டி தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம்12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்கள் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். பெரியாரின் சிந்தனைகளை சட்டமாக்கியவர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்தது முத்தமிழறிஞர் கலைஞர். இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் பெண் காவலர்களை நியமித்ததே கலைஞர்தான். தற்போது மகளிர் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட மகளிர் வளர்ச்சி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொண்டு வந்துள்ளது,"இவ்வாறு தெரிவித்தார்.

