மணிலா: பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் மத்திய பிலிப்பைன்சில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சூறாவளியுடன் கனமழை கொட்டியதால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல், பிலிப்பைன்சின் மத்திய பகுதியை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்த போது, நீக்ரோஸ் ஆக்சிடென்டல், சிபு, தெற்கு லெய்டி உள்ளிட்ட மாகாணங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. மணிக்கு 140 கிமீ முதல் 195 கிமீ வரையிலும் பலத்த சூறைக்காற்று வீசியது. கனமழை கொட்டியதால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. செபு மாகாணத்தில் உள்ள மண்டாவ் நகரில் ஆள் உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் பலரும் உயிர் தப்பிக்க வீட்டின் கூரையில் தஞ்சமடைந்தனர்.
கிழக்கு சமரில் பலத்த காற்று வீசியதால் கார்கள் தூக்கி வீசப்பட்டன. ஹோமோன்ஹாஜ் தீவில் 300க்கும் மேற்பட்ட கிராமப்புற குடிசை வீடுகள் கடும் சேதமடைந்தன. புயல் கரை கடந்த பின் நேற்று காலை மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பல பகுதிகளில் வெள்ளம் அதிக அளவு இருப்பதால் தண்ணீர் வடிந்த பிறகே மீட்பு பணிகள் செய்ய முடியும் என அதிகாரிகள் கூறினர். பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புயலில் முறிந்து விழுந்த மின் கம்பங்கள் சரி செய்யும் பணி நடக்கிறது. புயலால் 26 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலுக்கு முன்பாக கிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் முன்னெச்சரிக்கையாக 1.50 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக பேரிடர் மீட்பு படையினர் கூறி உள்ளனர்.
* பிலிப்பைன்சில் இந்த ஆண்டு ஏற்பட்ட 20வது புயல் கல்மேகி. அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 புயல்கள் தாக்கக் கூடும்.
* அங்கு, 12க்கும் மேற்பட்ட வெடிக்கக் கூடிய எரிமலைகள் உள்ளன.
* உலகின் மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் உள்ளது.
