தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்து மின்சார கார் விற்பனையை முதல்வர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத்தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் வின்பாஸ்ட் கார் கண்காட்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, தூத்துக்குடியில் முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் வின்பாஸ்ட் மின்சார விஎப்-6, விஎப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்துவைக்க இன்று (4ம் தேதி) காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று, தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து, மின்சார கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். மேலும் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை திரும்புகிறார். நிகழ்ச்சிகளில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.